10 பவுன் நகை திருட்டு வழக்கில் தம்பதி உட்பட 3 பேர் கைது

திருப்பூர், அக். 17:   திருப்பூர், இடுவம்பாளையம், வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் பனியன் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி சரவணகுமார் வீட்டை பூட்டி விட்டின் அருகில் சாவியை வைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து லாக்கரில் இருந்த 10 பவுன் நகையை திருடிசென்றனர். இந்நிலையில் சரவணகுமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சரவணகுமார் வீரபாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சரவணக்குமார் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தினேஷ்குமார் (22), அவரது மனைவி ராபியா (22) ஆகிய இருவரும் சேர்ந்து நகையை திருடி ராயபுரம் பகுதியை சேர்ந்த அலிப்கான் (38) என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories: