தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை

ஈரோடு, அக். 17:ஈரோட்டில் தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஈரோடு ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் பாரத் (32). டெக்ஸ்டைலில் மடிகாரர். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அம்மாபேட்டை தாதம்பட்டியை சேர்ந்த மயில்வாகனம் மகள் கவிதா (27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. கவிதா நேற்று முன்தினம் பாரத்திடம் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்குமாறு கேட்டார். இதற்கு பாரத், கவிதாவின் அம்மா கொடுத்த பணத்தில் துணி எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

இதற்கு கவிதா, உங்கள் பணத்தில் தான் எனக்கு துணி எடுக்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டின் சமையலறைக்குள் சென்று அறையை தாழிட்டு, தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாரத், கவிதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கவிதாவின் தந்தை, மயில்வாகனம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டில் கவிதா தற்கொலை செய்து கொண்டதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: