தொடர் மழையால் தீபாவளி விற்பனை களை கட்டுமா?

ஊட்டி, அக். 17:  நீலகிரியில் தொடர் மழை பெய்து வருவதால் தீபாவளி விற்பனை களை கட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இடைபட்ட காலங்களில் மழை குறைந்து காணப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறித்த சமயத்தில் பெய்வதில்லை. அதுமட்டுமின்றி, காலம் தவறி பெய்வது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று காலம் தவறி பெய்யும்போது, பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, கன மழை பெய்யும் சமயங்களில் சாைலயோரங்களில் மண் சரிவு, நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரியில் பருவ மழை பொய்த்த நிலையில் இந்த ஆண்டும் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை போக்கு காட்டியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்தது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியது. அனைத்து ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் அதிகளவு காணப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தற்போது, வடகிழக்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கிவிட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இம்மாவட்டத்தில் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மஞ்சூரில் பாறைகள் உருண்டு விழுந்ததுள்ளன. மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் பலியாகியுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில், பருவ மழை நீலகிரி மாவட்டத்தை பதம் பார்த்து வருகிறது. இச்சூழ்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு கடை விரிக்கும் வியாபாரிகளின் நிலைமை பரிதாபமாகிவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஊட்டி புறநகர் பகுதி மக்கள், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க தற்போது ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். சில தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் போனஸ் வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் புதிய பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனாலும், மழை மிரட்டிக்கொண்டே இருக்கிறது. கன மழை பெய்தால் வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் கருதுகின்றனர்.

Related Stories: