குன்னூர், அக்.17: குன்னூரில் தோட்டகலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சிம்ஸ் பூங்கா. தற்போது இரண்டாவது சீசன் என்பதால் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இரண்டாவது சீசனுக்கான மலர் நாற்றுகள் நடப்பட்டு மலர்கள் நன்கு பூத்து காணப்பட்டது.
இதனை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகளின் குன்னூர் பகுதிக்கு வரத்தொடங்கினர். கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பூங்காவில் உள்ள படகு ஏரியில் தண்ணீர் செல்லும் முக்கிய கால்வாய் அடைப்பு ஏற்பட்டு ஏரி நிறைந்து பூங்காவில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு நடப்பட்டிருந்த டேலியா, லில்லியம் உட்பட பல்வேறு மலர் செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும், பல்வேறு மலர்கள் அதிக மழை காரணமாக அழுகியது. மேலும், தண்ணீர் அதிகரித்துள்ளதால் பூங்காவில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீசனுக்காக தயார் நிலையில் இருந்த மலர் செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.