ஈரோடு, அக்.17: ஈரோடு மாநகராட்சியின் உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வைராபாளையம் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பையை மைக்ரோ கம்போஸ்டிங் முறையிலும், மக்காத குப்பைகளை தனியார் நிறுவனத்தின் மூலம் பயோமைனிங் முறையிலும் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மைக்ரோ கம்போஸ்டிங் உரம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சியின் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் துப்புரவு காலனியை சேர்ந்த விஜயன் (37) என்ற தொழிலாளி மைக்ரோ கம்போஸ்டிங் அரவை இயந்திரத்தில் குப்பைகளை கைகளால் தள்ளி விட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
தற்போது விஜயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளி விஜயனின் குடும்பத்தினருக்கு தனியார் நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.