ஈரோடு, அக். 17: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அக்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் காசிபாளையத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும், கோபிசெட்டிபாளையம் சத்தி-அத்தாணி ரோட்டில் டி.ஜி.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சியாளர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. பொறியியல் தொழிற்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவியர் நேரடியாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டர், டர்னர் ஆகிய பாடப்பிரிவுகளிலும், கோபியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக் ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங், வெல்டர் ஆகிய 4 தொழிற்பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.