பெரம்பலூர், அக். 17: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே தீபாவளி பட்டாசுகளை வெடிக்க்கூடாது என்று மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் விநியோகம் செய்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசுகளை ஆபத்தின்றி மிகவும் பாதுகாப்பாக வெடிக்க தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரங்களை துண்டு பிரங்களை விநியோகித்து மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தீயணைப்புத்துறையின் பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலர் தாமோதரன் உத்தரவின்பேரில் குன்னம் தாலுகாவில் உள்ள வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் நிலைய அலுவலர் (பொ) பழனிச்சாமி தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் பால்ராஜ், அங்கமுத்து, கவியரசன், கார்த்திகேயன், வரதராஜ் ஆகியோர் வேப்பூர் பஸ்ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளிலும், வேப்பூர், நன்னை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் நேரடியாக சென்று விபத்தின்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான ஆலோசனை தெரிவித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பஸ் பயணிகளிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.