பாடாலூர் அருகே ஒருதலை காதலால் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

பாடாலூர், அக்.17: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சுதாகர் (25) ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி பெரம்பலூர் காவல்நிலையத்திலும், எஸ்பி அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சுதாகர் கடந்த 10ம் தேதி கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்த மாணவியை வீட்டிற்குள் சென்றபோது பின் தொடர்ந்து சென்று கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் அறுத்துள்ளார். பின்னர் தயாராக நின்றிருந்த உறவினர் முருகேசன் மகன் சரத்குமார் என்பவரின் பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் மாணவியை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இருவரும் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுகந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் சுதாகர், சரத்குமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: