கம்பம், அக்.17: கம்பம் அரசு பொது மருத்துவமனையில் நிரந்தரமான சித்த மருத்துவர் நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அரசு மருத்துவனைக்கு அடுத்து பெரிய அரசு மருத்துவமனையாக கம்பம் அரசு மருத்துவமனை திகழ்கிறது. இங்கு 40 செவிலியர்களுடன், 21 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். இருதய நோய் சிறப்பு மருத்துவர், எலும்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் மூவர் என மொத்தம் 21 மருத்துவர்களுடன் கம்பம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு வெளி நோயாளிகளாக சுமார் ஆயிரத்திலிருந்து 1300 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளியாக 175 முதல் இருநூறு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சீமாங் சென்டராக உள்ளதால் மாதம் தோறும் 170 முதல் 220 பிரசவங்கள் நடக்கிறது. கம்பம் அரசு மருத்துமனை டயாலிசிஸ், மற்றும் பிளட் பேங்க் வசதியும் உள்ளது. இதனால் நோயாளிகள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். கம்பத்திலிருந்து மட்டுமல்லாது சுற்றியுள்ள கூடலூர், புதுப்பட்டி, கே.கே பட்டி, நாராயண தேவன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் நோயாளிகள் வருகின்றனர். கம்பம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் ஒரு வருடமாக நிரந்தரமான சித்தமருத்துவர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். சித்தா பிரிவில் அதிக அளவில் சக்கரை நோயாளிகள், மூட்டு வலி சிகிச்சை, தோல் வியாதிக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிப்பட்டது. ஆவி குளியல், மஜாஜ், நீராவி குளியல் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யப்பட்டது.