வாழை பயிரில் நோய் தாக்குதலை தடுக்க டிப்ஸ்

வத்தலக்குண்டு, அக்.17: வாழைப்பயிரில் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, ‘வாழைப்பயிரில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிரை வேர்ப்பகுதி தவிர அனைத்தையும் அழித்துவிட வேண்டும். அவ்விடத்தில் 2 கி.கி சுண்ணாம்புத்தூள் போட வேண்டும். வேர்ப்பகுதியில் துளையிட்டு 60 மி.கி கார்பன்டசிம் மருந்து நிரப்பப்பட்ட காப்சூல் குப்பியை உள்ளே செலுத்த வேண்டும். அல்லது 20 மி.கி சூடடோமோனஸ் என்ற உயிரியல் காரணியை மேற்குறிப்பிட்ட முறையில் செலுத்த வேண்டும். சிக்கடோக்கோ இலைப்புள்ளி நோய்க்கு போர்டோ கலவை அல்லது கார்பன்டசிம் 1லி நீரில் 1 கிராம் வீதம் கலந்து இலைகள் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். அசுவினி தாக்குதலுக்கு 1லி நீரில் 2மி.லி மிதைல் டெமட்டான் அல்லது மோனோக்குரோடாபாஸ் லிட்டருக்கு 1மி.லி என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். வாழை இலைகளை தின்னக்கூடிய புழுக்களுக்கு 10 லி நீருக்கு 6.5மி.லி டைக்ளோவாஸ் அல்லது கார்பரைல் 1 லிட்டருக்கு 2 கிராம் அளவில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: