காளையார்கோவில் கண்மாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

காளையார்கோவில், அக்.17: காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளக்கண்மாயில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. காளையார்கோவில் ஒழுகுளக்கண்மாய் நகர்புறத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. இக்கண்மாயை சுற்றிலும் வீடுகள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி முத்துவடுகநாதத் தேவர் நினைவிடம் உள்ளது. இப்பகுதியில் தான் மனிதர்களின் கடைசி நிகழ்வு நடக்கும் சுடுகாடும் உள்ளது. சுடுகாட்டிற்கு கூட செல்லமுடியாத அளவிற்கு இக்கண்மாயில் காளையார்கோவில் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் மருத்துவக்கழிவுகள், அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், விழாக் காலங்களில் உணவு அருந்தியபின் போடப்படும் எச்சில் இலைகளையும் ஆங்காங்கே கொட்டி விட்டு செல்வதுடன் தீயைமூட்டிவிட்டு செல்வதால் புகைந்துகொண்ட இருக்கின்றன. இறுதி ஊர்வலம் மற்றும் சமாதிக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாலும் புகை மூச்சை அடைப்பதாலும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. பல மாதங்களாக குப்பையை அழிக்காமல் விட்டதால் ஏற்படும் நாற்றம் தொற்று நோய் ஏற்படும் அளவிற்கு வீசுகின்றது. மேலும் மருத்துவமனைகளில் இருந்து கொட்டப்படும் மருத்துவகழிவுகள், டானிக் மற்றும் மருந்து பாட்டில்கள், குடிமகன்கள் விட்டுச்செல்லும் பாட்டில்கள் போன்றவை உடைந்து நெருங்கி கிடப்பதாலும் நடப்பதற்கு கூட அச்சமாக உள்ளதாக மக்கள் கூறுகின்றார்கள்.

சமூகஆர்வலர் வீரசேகர் கூறுகையில், காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்துக்கண்மாய் சுமார் 52 ஏக்கருக்கு மேல் உள்ள பெரியகண்மாய். இக்கண்மாயைச் சுற்றி சில வருடங்களுக்கு முன் 40 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்து வந்தார்கள். தற்போது விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனையாக மாறிட்டதாலும் கண்மாயைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டி வருவதாலும் கண்மாய்க்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் அடைபட்டு நீர் வரத்துச் சுத்தமாக நின்றுபோனது. மேலும் கண்மாயைச் சுற்றி கருவேல் மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வீடுகளில் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். மேலும் அப்பகுதியில் அதிகளவில் பன்றிகள் சுற்றிதிரிகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து திட்டக்கழிவு திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுத்து மற்ற கழிவுகளை அகற்றுவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்தப் பயன்பாடும் இல்லாமல் கிடக்கின்றது. மழைக்காலம் என்பதால் கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றம் நகர் பகுதிகளில் நோய்களின் தாக்கத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது. மேலும் மர்மநோய்கள் ஏற்படக் கூடும் நிலை உள்ளது. குப்பை கிடங்கின் மிக அருகில்தான் காளையார்கோவில் பகுதிக்கு செல்லும் குடிநீர் போர்வல் அமைத்து மேல்நிலைத் தொட்டிமூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது.

கண்மாய் என்பதால் மழைகாலங்களில் குப்பைகிடங்கில் தண்ணீர் தேங்குகின்றது. அந்தத் தண்ணீர் அப்படியே போர்வெல்லில் இறங்க வாய்ப்புள்ளது. குப்பை கொட்டுவதற்கும் அவற்றை முறையாக அழிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் பரவாமல் இருப்பதற்கான மருந்துகளை தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: