கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

சிவகங்கை, அக்.17: மானாமதுரை அருகே நீர் வரத்து கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி மூன்று கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: மானாமதுரை அருகே கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம் கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். இப்பகுதி கிராமங்களுக்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். எங்கள் கிராமங்களின் கண்மாய்களுக்கு வைகையில் இருந்து கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்து வருகிறோம்.இந்நிலையில் இந்த கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட முயற்சி செய்யப்படுகிறது. விவசாய நிலங்களை பிளாட் போட வணிக நோக்கத்தில் இப்பகுதியில் பாலம் கட்ட முயற்சிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை, பேலீசார், வருவாய்த் துறை மூலம் அமைதி பேச்சுவார்த்தை நடடைபெற்றது. ஆனால் இதுபோன்ற கிராமத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை மறைத்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றுள்ளனர். இங்கு பாலம் அமைப்பதால் கண்மாய்க்கு வரம் நீரின் அளவு குறையும்.

ஏற்கனவே இப்பகுதியில் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற அனுமதி அளித்ததால் தற்போது கால்வாயில் வீடு, கட்டிடங்களில் இருந்து வரும கழிவுநீர் கலக்கிறது. மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. இந்த கால்வாயை கிராமத்தினர் சொந்த செலவில் தூர்வாரி வருகிறோம். பாலம் கட்ட அனுமதித்தால் தூர்வார முடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயத்தை பாதுகாக்க, நீர் ஆதாரத்தை பாதுகாக்க கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராமமக்கள், பாலம் கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.

Related Stories: