சிவகங்கை, அக். 17: சிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனையை கடந்த 2011ல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு இடம் மாற்றம் செய்தனர். பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவமனை, காச நோய் பிரிவுகள் மட்டும் இயங்கி வருகின்றன.பழைய அரசு மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனித்தனியே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கன்றன. எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் சிதிலமடைய தொடங்கியுள்ளன. இந்த மருத்துவமனை கட்டிடங்களை சுற்றிலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. மருத்துவமனை கட்டிட காம்பவுண்ட் சுவரையொட்டி தெற்கு பகுதியில் பார்வையற்றோர் பள்ளி உள்ளது. மருத்துவமனை வளாக புதர்களுக்குள் இருந்து பள்ளிக்குள் பாம்புகள் படையெடுத்து வருகின்றன.