காலியிடங்களை நிரப்ப கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பழநியில் நடந்தது

பழநி, அக். 17: காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி பழநியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழநி பஸ்நிலைய ரவுண்டானா அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் சிஐடியு சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் பஷீர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு சரியான ஊதியம் வழங்க வேண்டும். வாரியத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து இறந்த வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆய்வக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு 20 % போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் செயலாளர் ஐயப்பன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜவேல், துணைச் செயலாளர் முருகராஜ், நிர்வாக கமிட்டி உறுப்பினர் துரைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: