கொலை வழக்கு கைதி திடீர் சாவு சேலம் சிறையில் மாஜிஸ்திரேட் 2 மணி நேரம் விசாரணை

சேலம், அக்.17: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள காவேரிநகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் குருசாமி (60). இவர், தம்பி மனைவியை கொலை செய்த வழக்கில் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை (14ம்தேதி) காலை போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். கடந்த ஒருவாரமாக சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்த குருசாமி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் 2வது நீதித்துறை நடுவர் சிவா நேற்று சிறையில் விசாரணை நடத்தினார். கைதி தங்கியிருந்த அறை, அவருடன் தங்கியிருந்த கைதிகள், மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற வார்டர்கள், டாக்டர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. பின்னர் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

Related Stories: