ஆத்தூர், அக்.17: ஆத்தூரில், தாலிக்கு தங்கம் வாங்குவதற்காக 6 மணி நேரம் காத்திருந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்டவை கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் விண்ணப்பித்து காத்திருந்த 304 பயனாளிகளுக்கு நேற்று ஆத்தூர் பிடிஓ அலுவலகத்தில் தாலிக்கான தங்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காலை 10 மணிக்கே பயனாளிகள் குவிந்தனர். ஆனால், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா மாலை 4 மணி வரையில் வரவில்லை. இதனால், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிடக்கூட செல்லாமல் கைகளில் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள் அவதிக்குள்ளாகினர். மாலை 6 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து சேராததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.