கடையம், அக். 17: கடையம் யூனியனுக்குட்பட்டது முதலியார்பட்டி ஊராட்சி. இங்குள்ள காந்திநகரில் 1வது, 2வது, 3வது ஆகிய தெருக்களில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகள் இருள் சூழ்ந்து கிடப்பதால் விஷ ஜந்துகள் வீட்டிற்கு புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இந்த பகுதியில் புகுந்த கருநாகத்தால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.