காரைக்கால், அக்.17: காரைக்கால் மாவட்டத்தில் கோயில் இடத்தில் இயங்கும் கடை, அலுவலங்களுக்கு இன்றைய சந்தை நிலவரப்படி வாடகையை உயர்த்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். தேசிய தலைவர் தரன், தேசிய துணைத் தலைவர் லோகேஷ், தமிழக மாநில தலைவர் கோவிந்தராஜ், புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி மற்றும் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, தேசிய தலைவர் தரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் கடை, அலுவலகம், வணிக நிறுவனங்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டு மென்றால், ரூ.20 ஆயிரம் வாடகை வாங்க வேண்டிய இடத்திற்கு வெறும் ரூ.2000 வாங்கப்பட்டு வருவது வேதனையானது. இதனால், பல கோவில்கள் வருவாய் இன்றி உள்ளது. மேலும் பல கோவில் இடங்கள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிப்பில் உள்ளது.