கும்மிடிப்பூண்டி, அக்.17: கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ம் தேதி கொத்தனார் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ விடாத ஆத்திரத்தில் கொத்தனாராக வேலை செய்து வந்த கணவனை வெட்டிக்கொன்றதாக மனைவி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னசோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (38). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த முருகன், மனைவி தேவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு வீட்டுக்குள் முருகன் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுகாயம் இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் தேவியை பிடித்து விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலன் வினோத்திடம் சேர்ந்து வாழவிடாத ஆத்திரத்தில் கழுத்தில் வெட்டி முருகனை கொன்றதாக தேவி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவியை நேற்று போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் முருகனை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கூறப்படும் வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.