மதுராந்தகம், அக். 17:மதுராந்தகத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ஜி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவேகானந்தா பள்ளி தாளாளர் டி.லோகராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டி.திலகவதி வரவேற்றார்.முதன்மை கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில், மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது சுமார் 200 அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
நிகழ்ச்சி குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த அறிவியல் கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகள் இடையே கண்டுபிடிப்புகளின் ஆர்வத்தை அதிகரிக்கும். இதனால், அவர்களுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் நிச்சயம் ஏற்படும் என்பது உண்மை. இதனால், அறிவியல் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயம் உள்பட பல தொழில்கள் வளர்ச்சியடையும். வேலைவாய்ப்புகள் அதிகரிகும். எனவே, மாணவ, மாணவிகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்’ என்றார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி டீன் ராமசாமி, மதுராந்தகம் வட்டார பள்ளி துணை ஆய்வாளர் இ.வீரமணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆழ்வார் திருமணி, சுந்தரமூர்த்தி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.