சென்னை: விடுதி காப்பாளர் அடித்து உதைப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த 2 மாணவர்கள் மாயமாகி உள்ளனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சுந்தரம் சாலையில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஜெயசீலன் மற்றும் 11ம் வகுப்பு படித்து வரும் சாய்குமார் ஆகியோர் கடந்த 10ம் தேதி திடீரென பள்ளியில் இருந்து மாயமாகினர். உடனே விடுதி காப்பாளர் ராஜா மாயமான மாணவர்களை பல இடங்களில் தேடினார். அப்போது பள்ளி வளாகத்தில் கடிதம் ஒன்று கிக்கியது. அதில், மாயமான இரண்டு மாணவர்களும் ‘விடுதி காப்பாளர் எங்களை அடித்து துன்புறுத்துகிறார். அதனால் நாங்கள் வீட்டிற்கு செல்லாமலும், விடுதியில் தங்காமலும் எங்கேயோ செல்கிறோம்’ என எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது.