பணம் செலுத்தும் இயந்திரம் பழுது வங்கி வாடிக்கையாளர்கள் அவதி

மானாமதுரை, அக்.16:  ஸ்டேட் வங்கியின் சார்பில் பணம் செலுத்தும் தானியங்கி இயந்திரம் பழுதாகியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை மேல்கரையில் ஆர்சி சர்ச் அருகில் ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு நான்கு கவுன்டர்களிலும் பணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வங்கியில் பணப்பரிவர்த்தனை கிடையாது என்பதால் பொதுமக்களின் வசதிக்காக அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பணம் செலுத்தும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் அவசர காரியங்களுக்காக மாலை 4 மணிக்கு மேல் பிறரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்த விரும்புவோர் இரவு முழுவதும் இந்த இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்துவது வழக்கம். வங்கி நேரத்தில் கூட சிலர் இந்த இயந்திரத்தில் உடனடியாக பணத்தை செலுத்தி விட்டு செல்வதால் மானாமதுரை நகர் மக்களுக்கு பெரிதும் பயனாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த இயந்திரம் பழுதாகியது. இயந்திரம் பழுதாகிய தகவல் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை இயந்திரம் சரி செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் அவசர தேவைக்காக பிறருக்கு பணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சேகர் கூறுகையில், எனக்கு அந்த வங்கி கிளையில் கணக்கு இல்லை என்றாலும் இந்த தானியங்கி இயந்திரத்தில் வேண்டியவர்களுக்கும் அலுவலக நண்பர்களுக்கும் அவர்கள் தெரிவிக்கும் எண்ணிற்கு பணத்தை செலுத்தி விடுவேன். வங்கி வேலை நேரம் தவிர இந்த இயந்திரத்தால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இந்த இயந்திரம் இயங்காததால் பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர் பலர் சிப்காட் ஸ்டேட் வங்கிக்கோ அல்லது வேறு வங்கிகளுக்கோ செல்ல வேண்டியுள்ளது.

இந்த இயந்திரம் வேறு வங்கிகளில் இல்லாததால் மாலை 4 மணிக்கு மேல் வேறு எந்த வங்கியிலும் பணத்தை பெற மறுக்கின்றனர். இதனால் அவசர தேவைக்கு பிறருக்கு பணம் அனுப்ப முடியவில்லை. வங்கி அதிகாரிகள் இயந்திரத்தை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஸ்டேட் வங்கி மானாமதுரை கிளை மேலாளர் விமல்ராஜ் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன் வங்கியில் பணம் செலுத்த வந்த நபர் ஒருவர் ஐநூறு ரூபாய் கட்டுகளை ஸ்டேப்லர் பின் உடன் செலுத்தியுள்ளார். அது இயந்திரத்தின் முக்கிய பகுதியில் சிக்கி கொண்டதுடன் பணம் பெறும் பகுதியையும் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை அலுவலகத்திற்கு தெரியபடுத்தியுள்ளோம். வங்கி வேலை நேரங்களில் பிறவங்கிகளின் வாடிக்கையாளர் க்ரீன் அட்டை வைத்திருப்பவர், ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் கணக்கு எண்ணை தெரிவித்து பணம் செலுத்தலாம். விரைவில் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு இயங்கும் என்றார்.

Related Stories: