அதிக உரமிட்டால் நெல் விளைச்சல் பாதிக்கும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை, அக். 16:  தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் நெற்பயிர்களில் விளைச்சல் பாதிக்கப்படும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நெற்பயிர்களுக்கு டிஏபி, யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவில் நெற்பயிரிடப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதிலிருந்து 25வது நாள், 45வது நாள், 65வது நாள் தலா 22கி.கி உரமிட்டால் போதுமானது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்தில் 25, 45, 65வது நாட்களில் தலா 50கி.கி எடையுள்ள ஒரு மூட்டை யூரியா உரத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிகப்படியாக உரமிடப்பட்ட சில நாட்களில் பயிர்கள் பார்ப்பதற்கு அதிக பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்படும். அதிக உரமிட்டால் பயிர்கள் நன்கு வளரும் என நினைத்து விவசாயிகள் இவ்வாறு செய்வது தவறு. சரியான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும். வேளாண் அலுவலர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்கலாம். பயிர்களுக்கு உரங்கள், பூச்சி மருந்து பயன்படுத்துவது குறித்து தகுந்த ஆலோசனைகளை பெற்று அதன்படி நடப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: