திண்டுக்கல், அக். 16: பருவமழை காலம் விரைவில் துவங்கவுள்ளதால் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இதன் அறிகுறியாக அடிக்கடி பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் இரவில் குளிர்ந்த காற்றே அடித்து வருகிறது. அவ்வப்போது லேசான மழைத்தூறலும் போடுகிறது. இந்த காலநிலை கொசுக்கள் உற்பத்திக்கு ஏற்றதாகும். இதனால் பலவித தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நகர் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மழை காலத்தில் டெங்கு, மலேரியா, சளி, இருமல், மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவும். சாலைகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்தவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.