சேலம், அக்.16: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020ன் முன்னேற்பாடு பணிகளாக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தினை, இந்திய தேர்தல் ஆணையம் நவ.18ம் தேதி நீட்டிப்பு செய்துள்ளது. இதனை சேலம் மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் 2020ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளின் முன்னேற்பாடு பணிகளாகவும், ஆரோக்கியமான வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை வாக்காளர்கள் சரிபார்த்து அதனை உறுதி செய்யும் விதமாகவும் ‘வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ செப்.1ம் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை பெறுதல் மற்றும் அவர்களின் விபரங்களை சரிபார்த்தல், வாக்காளர்களுக்கான சேவைகளை சரியான முறையில் வழங்கிட ஏதுவாக வாக்காளர்களின் கைபேசி எண்கள் பெறுதல் மற்றும் புவியியல் அமைப்பினை பெறுதல், வாக்காளர் தற்போது உள்ள வாக்குச்சாவடியில் ஏதேனும் மாற்றம் செய்ய தேவை உள்ளதா? அல்லது சரியாக உள்ளதா? என்றவிவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல், வாக்காளர் பட்டியலை மேம்படுத்துதல் போன்ற வசதிகளைப்பெறலாம்.