ஓசூர், அக்.16: அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ஓசூருக்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓசூரில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் இளைஞரணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணன், அசோக், ராமு, வேணு, முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தில், அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் பரிசு வழங்க வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.