தர்மபுரி, அக்.16: பென்னாகரம் அருகே 200 ஆண்டுகளுக்கு முந்தைய, சந்நியாசி கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தின் அருகில் உள்ள வயல்வெளியில், 200ஆண்டுகளுக்கு முந்தைய சந்நியாசிகள் எனப்படும் வளமைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவருமான சந்திரசேகர் தலையில் குழுவினர் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தமிழகத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சமணர்கள் இங்கே வந்தபோது, இப்பகுதியில் ஆடு மாடுகளுக்கு கொள்ளைநோய் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவற்றை தங்களின் சித்தமருத்துவத்தின் மூலமாக குணப்படுத்தி இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. துறவிகளை சந்நியாசி என்ற பெயரில் அழைப்பது, தமிழர்களின் வழக்கங்களில் ஒன்றாகும். துறவிகள் இப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்ற போது, அவர்கள் பயன்படுத்திய மந்திரச் சொற்கள் அடங்கிய தகடு போன்ற பொருட்களில் இருக்கும் குறியீடுகளை, கல்லில் செதுக்கி வைத்து மீண்டும் கால்நடைகளுக்கு இத்தகைய நோய் பரவாமல் இருக்க நட்டுச் சென்றிருக்கலாம். இக்கல் சுமார் 3 முதல் 4 அடி உயரம் உள்ளது. இதன் முன் பகுதியில் சூரியன் மற்றும் சூலக் குறியீடுகள் காணப்படுகின்றன.