மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரத்தில் இரு தலைவர்கள் சந்திப்புக்காக ஜொலித்ததைபோல், எப்போதும் பொலிவுடன் பராமரிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சமீபத்தில் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்களது, வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விரிவுபடுத்தப்பட்டு, புதிய சாலைகளை அமைத்தனர். இதில், வெண்ணெய் உருண்டை கால் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு, அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஒரு சில இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தில், பல்லவர் கால புராதான சின்னங்களை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
கடந்த வாரம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசும் நிகழ்வு மாமல்லபுரத்தில் நடந்தது. இதுஎங்கள் ஊருக்கு மிகப் பெரிய பெருமையை சேர்த்துள்ளது. இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி கடந்த பல ஆண்டுகளாக சாலை ஓரங்களில் தொப்பி, கண்ணாடி, ஐஸ்கிரீம் போன்ற சிறு கடைகளை அகற்றி புதிய சாலை அமைத்தனர்.