திருமயம், அக்.16: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா-மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கம் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி அடுகப்பட்டி, மெய்யப்பட்டி, இளஞ்சாவூர், நெய்வாசல், பிலிவலம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. இதில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு திருமயம் வேளாண்மை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் திருமயம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் பயிற்சி நடைபெற்றது. அப்போது பேசிய ரவிச்சந்திரன் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடப்பாண்டு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் தெரிவித்தார். மேலும், பிரதம மந்திரியின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். விவசாயிகள் வயதுக்கு ஏற்ப மாதந்தோறும் பங்களிப்பு தொகையினை செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமாக அதே தொகையினை விவசாயிகள் கணக்கில் மத்திய அரசு செலுத்தும்.