நாகர்கோவிலில் மகனின் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து டிரைவரை வெட்டி கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி கைது

நாகர்கோவில், அக்.16: நாகர்கோவிலில் மகனின் ஒரு தலைக்காதல் விவகாரத்தில், டிரைவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் ெவட்ட முயன்ற வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மகன் மற்றும் மேலும் ஒரு பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். டிரைவர். இவரது மகள், 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் சந்துரு (19) என்பவர் மாணவியை பின் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக காதலித்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து மாணவியின் குடும்பத்துக்கு சந்துரு மற்றும் அவரது குடும்பத்தினர் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தனது மகளுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு தருமாறு ஏ.எஸ்.பி. ஜவகரிடம் ராமச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசாருக்கு ஏ.எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து சந்துரு மற்றும் அவரது தந்தை மணிகண்டன் உள்ளிட்டோரை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன், வீட்டில் இருக்கும் போது மணிகண்டன், அவரது மகன் சந்துரு மற்றும் ஆறுமுகம் என்பவரின் மனைவி சூர்யா ஆகிய 3 பேர் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தியால் ராமச்சந்திரனை வெட்டி கொல்லவும் முயன்றனர். இதில் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். மேலும் வீட்டில் இருந்த கதவுகள், ஜன்னலையும் உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராமச்சந்திரன் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மணிகண்டன், மகன் சந்துரு மற்றும் உடன் சென்ற ஆறுமுகம் மனைவி சூர்யா உள்பட 3 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அதிமுக வட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: