திருச்சி, அக்.15: தினக்கூலி ரூ.500, 6 மாத அரியர் பணம் கேட்டு திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ஈடுபட்டனர். அவர்களிடம் தீபாவளிக்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.திருச்சி மாநகராட்சியில் 1,200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சுயஉதவிக்குழு மூலம் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.360 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019-2020க்கு தினக்கூலி ரூ.500 என நிர்ணயம் செய்ததன் அடிப்படையில் 1.4.2019 முதல் ரூ.500 தினக்கூலி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 தர வேண்டும், 6மாத அரியர் பணத்தையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சிஐடியு துப்புரவு ெதாழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலைமுதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். நுழைவு கேட்டுகளை பூட்டிவிட்டு பணியாளர்களை மட்டுமே அனுமதித்தனர். மனு கொடுக்க வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.