திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கக்கோரி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாலுகா அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.