அரியலூர், செப். 30: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை நியமனம் செய்a வேண்டுமென செந்துறையில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் 16 அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இமயவர்மன் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட சங்க தலைவர் இளையராஜா, முன்னாள் மாநில சங்க நிர்வாகி பெரியசாமி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளராக வடமலை, மாவட்ட துணை செயலாளராக கணேசமூர்த்தி, சங்க செய்தி தொடர்பாளராக மாயவன் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் சென்னையில் மாநில சங்கம் மூலம் நடைபெறும் 75வது பவள விழா மற்றும் 23வது மாநில மாநாட்டில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியாளர்களுக்கு புதிதாக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். உரிய கல்வித்தகுதி உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் மாயவன், விடுதி பணியாளர்கள் ரவிச்சந்திரன், தியாகராஜன், பிரகதி, பள்ளி கல்வித்துறை சின்னதுரை பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் பங்கேற்றனர்.