அரசுக்கு விவசாயிகள் கண்டனம் சாலை சகதியாக மாறியதால் மணலாறில் பஸ்கள் நிறுத்தம்

சின்னமனூர், செப். 17: ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 12 கி.மீ சாலை சகதியாக மாறியதால் மணலாறில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 4 மலைக்கிராம மக்கள் சுமைகள் மற்றும் குழந்தைகளுடன் நடந்தே வீடு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ், மேகமலை உள்பட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. தேயிலை, ஏலம், மிளகு,காப்பி என பணப்பயிர்கள் தொடர் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக 18 கொண்டை  ஊசி வளைவுளை கொண்ட மலைச்சாலை பராமரிப்பு இல்லாமல் தடுப்புச்சுவர்கள் சரிந்தும், பாலங்கள் பழுதாகியும் கிடந்தன. இதனால் மக்கள் இச்சாலை வழியே பயணிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

சாலை அமைக்க வேண்டும் என்ற மக்களின்  பல்வேறு போராட்டங்களால் ரூ. 80.87 கோடி நிதி ஒதுக்கீட்டில் 35 கி.மீ  சாலை அமைக்கப்பட்டது. ஹைவேவிஸிலிருந்து மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலாறு வரையில் 15 கி.மீ சாலை பழுதாகி மண் மற்றும் சகதி சாலையாக மாறியதால் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது.

இச்சாலையை சீரமைக்க ரூ.20 கோடி மதிப்பில் பணிகள் துவங்கியது ஆனால் வனத்துறை நெருக்கடியால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக மழை பெய்வதால் ஐந்து மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலை சகதியாகவும், மெகாசைஸ் பள்ளங்களாகவும் மாறி விட்டது. இதனால் மேல் மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு கிராமங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மூட்டை முடிச்சுகள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மக்கள் சுமந்து சிரமப்பட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்கள் செல்வதற்கு   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: