சின்னமனூர், செப். 17: சின்னமனூரில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகியும் நகராட்சி நிர்வாகம் மெத்தம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சின்னமனூரில் உத்தமபாளையம் சாலையில் உள்ள வேம்படிகளம் முல்லைப் பெரியாற்றுக்குள் இரண்டு உறைகிணறுகள் மூலம் தண்ணீர் தேக்கப்படுகிறது. கரையில் உள்ள பவர் ஹவுஸிலிருந்து சேகரமாகும் தண்ணீரை பம்பிங் செய்து உழவர் சந்தைக்கு அருகிலுள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு சென்று 27 வார்டு நகர மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்களின் அழுத்தங்களால் ஆங்காங்கே குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்ள் புகார் செய்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.