தேனி, செப். 17: தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அரசு நிதி உதவி வழங்காமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என பாகுபாடின்றி அத்தனை உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை முடியும் முன்பே இந்த அமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேமிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், தற்போது வரை மிக, மிக குறைந்த அளவு வீடுகளில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என அத்தனை பிரிவுகளில் உள்ள உள்ளாட்சிகளிலும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. நடவடிக்கை எடுத்தால் எத்தனை வீடுகள் மீது எடுப்பது என உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் தவித்துப்போய் உள்ளனர்.