குடிநீர் கோரி குடங்களுடன் மறியல் வத்தலக்குண்டு அருகே பரபரப்பு

வத்தலக்குண்டு, செப். 17:  வத்தலக்குண்டு அருகே குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், ஜி.தும்மலப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கன்நகர். இங்கு சுமார் 50 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. இதனால் இப்பகுதியினர் தோட்ட கிணறுகளுக்கு அலைந்து, திரிந்து தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்து வருகின்றனர்.

 மேலும் வாகனங்களில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் கழிவுநீர் கால்வாய், கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று ஜி.தும்மலப்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், சப்இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: