நாமக்கல், செப்.17: நாமக்கல்லில், உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நாமக்கல்லில், உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்து, விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி, நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மோகனூர் சாலை, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக திருச்சி சாலை, நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையை சென்றடைந்தது. இதில், தற்கொலையை தடுப்போம், மனித இனத்தை காப்போம், போதை பழக்கம் தற்கொலை எண்ணத்தை தூண்டும், வாழ்க்கை சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்வோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர். அதை தொடர்ந்து, தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி மற்றும் செவிலியர் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.