ராசிபுரம், செப்.17: நாமக்கல் அருகே, திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழை ஓராண்டாகியும் வழங்காததால், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற ர.ஹரிஸ் என்ற மாணவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இவருக்கான மதிப்பெண் சான்றிதழ், 2018 ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கு வந்தது. ஆனால், ர.ஹரிஷ் என்பதற்கு பதிலாக ரா.ஹரிஷ் என இனிஷியல் தவறுதலாக இருந்தது. இதனையடுத்து, சான்றிதழில் திருத்தம் கோரி, பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்குனரகத்துக்கு, மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் மாணவரின் மதிப்பெண் சான்றிதழ், சம்பந்தப்பட்ட பள்ளிக்கோ, அவரது பெற்றோருக்கோ கிடைக்கவில்லை.