நாமக்கல், செப்.17: நாமக்கல்லில், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 155 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமை, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். முகாமில் பார்வையின்மை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, குள்ளத்தன்மை, அறிவுத்திறன் குறைபாடு, மனநோய், புற உலக சிந்தனை குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், மூளை நரம்பு சார்ந்த குறைபாடு மற்றும் ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது.