காஞ்சிபுரம், செப் 17: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில், அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரி ஆர்.கிரிதர் கூறினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், அத்திவரதர் அனந்தசயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நீராழி மண்டபம் நீரால் நிரம்பியிருக்கிறது. அக்குளத்தில் உள்ள தண்ணீர் சுத்தமாக உள்ளதா என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று ஆய்வு
செய்தனர்.திருக்குளத்தை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர், குளத்தில் இறங்கி தண்ணீரை கையால் எடுத்து சுத்தமாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மத்திய நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆர்.கிரிதர் கூறுகையில், கோயிலில் உள்ள குளத்தை பார்வையிட தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த குளத்தில் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ கூடாது. குளத்தில் மீன்களை அதிகளவில் விட்டால், அவை கழிவுகளை தின்று குளமும் சுத்தமாக இருக்கும்.கோயில் குளத்தை சுற்றி 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். மழைநீர் தொட்டிக்கு வந்தவுடன் சுத்திகரிக்கப்பட்டு குளத்திற்கு சென்றடையும்.அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீரை சுத்தமாக இருக்கிறதா என ஆய்வு செய்தோம் என்றார்.கோயிலில் குளத்தில் தண்ணீரை பார்வையிட தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.