தாளவாடி அருகே தனியார் பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து

சத்தியமங்கலம், செப்.17:  தாளவாடி அருகே தனியார் பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தொட்டகாஜனூர் கிராமத்தில் தனியார் பள்ளி  செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் வசதிக்காக கிராமப்புறங்களுக்கு பள்ளி சார்பில் வேன் மற்றும் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்தபின் தொட்டகாஜனூரிலிருந்து தலமலை மற்றும் கோடிபுரம்  வரை செல்லும் வேன், 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு  தாளவாடி- தலமலை சாலையில் சென்றுகொண்டிருந்தது. வேனை தொட்டகாஜனூரை சேர்ந்த டிரைவர் ரங்கசாமி ஓட்டினார். சிக்கள்ளி கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் உள்ள வனச்சாலை வழியாக வேன் சென்றபோது எதிரே வேகமாக வந்த பைக் மீது  மோதாமல் இருக்க டிரைவர் ரங்கசாமி வேனை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதிக்குள் புகுந்த வேன், மரத்தில் மோதி நின்றது. இதில் வேனின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில், பள்ளி மாணவ மாணவியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தாளவாடி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

Related Stories: