திருத்துறைப்பூண்டி, செப்.17: மரம் வளர்ப்பு அவசியம் குறித்து அரசைவலியுறுத்தியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: நாளுக்கு நாள் நமது பூமியானது வெப்பமடைந்து வருகிறது. இதனைதடுப்பதற்கு அரசும் மக்களும் இயற்கையை பாதுகாப்பதற்கான முயற்சியில் இறங்குவது மிக அவசியமாகும்.அதோடு கஜா புயலின் பாதிப்பால் நமது பகுதியிலிருந்த லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து போய் விட்டது. இதன் பாதிப்பும் பூமி வெப்பமயமாவதற்கு கூடுதல் வழி வகுத்துள்ளது. குறிப்பாக பூமி வெப்பமயமாவதை தடுப்பதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரங்களை புதிதாக வளர்ப்பதற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றநிலைமாறி ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும். இன்றைய நிலையில் இயற்கை அழிவை தடுக்க வெப்பத்தை தவிர்க்க முதல் காரணியாக மரம் வளர்ப்பு தான் உள்ளது.