மன்னார்குடி கமலாதேவி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி, செப். 17: மன்னார்குடி கீழராஜவீதியில் உள்ள கமலாதேவி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழராஜவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கமலாதேவி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடை பெற்றது. இதனையொட்டி கடந்த 3 தினங்கள் காமாட்சியம்மன் கோயிலில் யாக சாலை பூஜை நடைபெற்றது. யாக சாலையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணா ஹூதி நடைபெற்றது.இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பின்னர் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் புனித நீர் கொண்டு வந்து கமலாதேவி காளியம்மனுக்கு அபிசேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கோயிலில் விஷேச தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வாண வேடிக்கைகளுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Related Stories: