பூதப்பாண்டி, செப். 17: பூதப்பாண்டி அருகே தனியார் எஸ்டேட்டில் காட்டு பன்றியை கட்டுப்படுத்த வைத்த வெடிபொருள் வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார். குமரிமாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த தேவகிரி பகுதியில் ஒரு தனியார் எஸ்டேட் உள்ளது. அதில் ஏலம், கிராம்பு, நல்லமிளகு மற்றும் ரப்பர் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்டேட்டில் செங்கன்குடிவிளையை சேர்ந்த கோலப்பன் (85) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கோலப்பன் எஸ்டேட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, கோலப்பன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடலில் தீ காயம் இருந்தது. வலது கை சிதைந்திருந்தது.