புதுக்கடை அருகே பரிதாபம் கல்லால் தாக்கி ெதாழிலாளி கொலை வாலிபர் கைது

புதுக்கடை, செப். 17: புதுக்கடை அருகே தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கடை அருகே மாராயபுரம் ஆலப்பாடு பகுதியை ேசர்ந்தவர் குமார்(47), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து ஆகிவிட்டது. குமார் வேலை செய்யும் பணத்தில் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஷாஜின் (22). அடிக்கடி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் கேலி செய்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அருகில் நடந்த திருமண விழாவுக்கு  குமார் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஷாஜின் அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ஷாஜின், குமாரை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து அவரை தூக்கி சாலையோரம் உள்ள ஓடையில் வீசிவிட்டு ஷாஜின் சென்று விட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய குமாரை யாரும் கவனிக்கவில்லை.இந்த நிலையில் மறுநாள் காலை அந்த பகுதி வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமாரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குமாரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தற்போது குமார் இறந்து விட்டதால் கொலை வழக்காக மாற்றி, ஷாஜினை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: