நாகர்கோவில், செப். 17 குமரியில் வாரண்ட் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். நேற்று முன் தினம் ஒரே நாளில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 4 துணை போலீஸ் சரகங்கள் உள்ளன. இதில் சுமார் 650க்கும் மேற்பட்டவர்கள் வாரண்ட் குற்றவாளிகளாக உள்ளனர். அடிதடி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் தொடர்ந்து நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலும் இருந்து வருகிறார்கள். இவர்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களும் உண்டு. வழக்குகளில் ஆஜர் ஆகாததால், நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே நீதிமன்றத்தால் பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.