தூத்துக்குடி, செப். 17: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பேசினார். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி சக்திவிநாயகர்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி நிர்வாகிகள் அந்தோணி, செல்வராஜ், கோகிலா, தமிழரசி, சாந்தி, வக்கீல் முனியசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநகரச் செயலாளர் ஏசாதுரை வரவேற்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்எல்.ஏ., தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னத்துரை, தலைமைக்கழக பேச்சாளர்கள் மதுரை வெடி சண்முகம், நடராஜன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சண்முகநாதன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டின் தொழில் துவங்க ஏதுவாக உள்ள சூழலை எடுத்துரைத்து பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு முதலீடுகளை ஈர்த்து சாதனை மேற்கொண்டுள்ளார். இதனால் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அனைவரிடத்திலும் எளிமையான முதல்வர் என பெயரெடுத்துள்ளார்’’ என்றார்.