விக்கிரவாண்டி, செப். 15: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (60). இவர் மயிலம் சாலையில் புதிய வீடு கட்டி வருகிறார். இதில் கட்டிட மேஸ்திரி பாபு என்பவர் ஆட்களை வைத்து வேலை செய்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கட்டிட தொழிலாளிகள் அங்கு பணிக்கு வந்துள்ளனர். அப்போது பெரிய தச்சூரை சேர்ந்த சந்திரன் (55,) மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (45) ஆகிய இருவரும் கட்டிடத்தின் வெளிப்புறமாக வேலை செய்வதற்காக சாரம் அமைத்துள்ளனர்.
அப்போது வீட்டின் அருகே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் சாரம் போட எடுத்தபோது மரகம்பம் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.