மரக்காணம் அருகே பெண்ணிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

மரக்காணம், செப். 15: மரக்காணம் அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ்(30). விவசாயி. இவரது மனைவி மீனா(27). இவர் நேற்று மதியம் வீட்டு எதிரில் சாலை ஓரம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்துகொண்டு இரண்டு நபர்கள் அந்த வழியாக வந்துள்ளனர். இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க தாலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத மீனா கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஓடிவந்துள்ளனர்.

அவர்களிடம் நடந்த சம்பவத்தை மீனா கூறியுள்ளார். உடனே அப்பகுதி இளைஞர்கள் 3 பைக்கில் நகை பறித்துக்கொண்டு தப்பிய மர்ம நபர்களை தேடியும் கிடைக்கவில்லை. நகை திருடிக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்கள் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் ஹெல்மெட் ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதுபோல் தொடர்ந்து பிரம்மதேசம், மரக்காணம் பகுதியில் நகை, பைக் கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: